This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

சனி, 13 டிசம்பர், 2014

பதிப்புரை - சிந்தனை வட்டம்



கடந்த இரண்டு தசாப்தங்களாக கல்விசார், அறிவியல் நூல்களை வெளியிட்டு வந்துள்ள எமது "சிந்தனை வட்டம்" வாசக நெஞ்சங்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க தொடர்ந்து இலக்கிய நூல்களையும் வெளியிடவுள்ளதென்பதைத் தங்களுக்கு அறியத்தருவதில் பெருமிதமடைக்கின்றோம்.

ஈழத்து இலக்கியவானில் தமிழ் பேசும் பெண் எழுத்தாளர்கள் மிகக் குறைவு. அதிலும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களோ மிகமிகக் குறைவு. விரல்விட்டு எண்ணக் கூடிய முஸ்லிம் பெண் எழுத்தாளர்களிடையே சகோதரி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி குறிப்பிடத்தக்கவர்.

மீன்பாடும் தேனாடாம் கிழக்கிலங்கையில் சாய்ந்தமருது பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சகோதரி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 1980 கலீல் எழுதத் தொடங்கியவர். கவிதை,சிறுகதை,விமர்சனம் என இலக்கியத்தின் பல வடிவங்களில் தனது சுவட்டினைப் பதித்துள்ளவர். இவரால் எழுதப்பட்ட மரபுக்கவிதைகளுள் 40 கவிதைகளைத் தொகுத்து "தேன் மலர்கள்" எனும் மகுடத்தில் நூலாக வெளியிடுகின்றோம்.

இலங்கையில் முஸ்லிம் பெண் எழுத்தாளர் ஒருவரின் முதல் மரபுக்கவிதை தொகுதி என்ற வகையில் இக்கவிதைத் தொகுதி சிறப்புப்பெறும் அதேநேரத்தில், "சிந்தனை வட்ட" வெளியீடுகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவு தரும் வாசக நெஞ்சங்கள் இந்நூலுக்கும் தமது ஆதரவினைத் தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

சமர்ப்பணம்



 கரம் பிடித்து மண்ணில் எழுத 
 கற்றுத் தந்து 
கல்வி வித்தினை எந்தன் 
கருவில் விதைத்து 
முயற்சிக்கனியினை சமூகத்திற்குப் 
பிரயோசனம் அளிக்கும் படியாய் 
எழுதச் சொன்ன என்னுயிர் 
அன்புத் தந்தை 

மர்ஹூம் வைத்தியக் கலாநிதி 
யூ.எல்.ஏ. மஜீத் (ஜே.பி)
அவர்களுக்கு இந்நூல் அன்புக் காணிக்கை 

மறப்பது எங்ஙனஞ் சேடி....!


கொள்ளை யடித்தன னெந்தன கத்தினைக் 
கூடிய மர்ந்தனன் பின்னே - அன்புத் 
தொல்லை கொடுத்தனன் தொகை யெனக்குள்ளே 
தொடர்ந்து உதித்தனன் கள்வன் 
வெள்ளை யுளத்தினில் தாமரை போலவன் 
விரிந்து கிடந்தனன் நித்தம் 
எல்லையிலாதொரு இன்ப உணர்ச்சியில் 
என்னை மயக்கினன் சேடி....! 

நந்த வனத்தினி லன்றொரு நாழிகை 
நாயகனென் கரம் பற்றி 
சிந்தை குளிர்ந்திடச் சேர்த்து அணைத்தின்பச் 
சேதிகள் செப்பினன் சேடி 
எந்த னெழில் உடல் வந்து தழுவிட 
தென்ற லிடத்தினைத் தேடும் 
அந்த நற் பொழுதினை யானும் மறந்திடல் 
ஆகுவ தெங்ஙனஞ் சேடி....!

ஆண்மைக்கவன் நல் இலக்கணமாகுவான் 
ஆமிது மெய்யடி சேடி 
வீண் புகழ்ச்சியை வெறுத்து ஒதுக்குவான் 
வீரனென் காதலன் சேடி 
வான் தரும் மழை போலவன் அன்பு 
வரவு நிகழ்ந்திடுஞ் சேடி 
மான் விழிக்கவன் மகிழ்வினை யூட்டினன் 
மறப்பது எங்ஙனஞ் சேடி....!

தவமழை புனித குர்ஆன்....!



அறியாமை இருளில் மூழ்கி 
அகிலத்து மக்க ளெல்லாம் 
இறையோனை மறந்து பொல்லா 
ஈனராய் வாழ்தல் கண்டு 
நெறியோறாய் அவரை மாற்றி 
நிம்மதி வாழ்வில் காண 
இறையோனின் தூதர் மூலம் 
இறங்கிய புனித குர் ஆன்.....!

கல்லையே கடவு ளென்று 
கண்ணிலா வழி நடந்து 
இல்லையோர் தெய்வ மென்று 
இதயத்தில் மடமை கொண்டு 
புல்லையே பூக்க ளென்று 
புனிதத்தை மறந்து நின்றோர் 
அல்லலை அகற்ற அல்லாஹ் 
அருளிய புனித குர்ஆன்....!

மங்கையர் தம்மை மண்ணில் 
மதித்திடா வண்ணம் மூடர் 
எங்கணும் கொடுமை செய்யும் 
இழி நிலை தன்னை மாற்றிப் 
பொங்கிடு மொளியை இந்தப் 
பூவுல கெங்கும்  ஏற்றி 
தங்கமாய் இறைவன் தந்த 
தவமழை புனித குர் ஆன்....!

வெள்ளி, 12 டிசம்பர், 2014

விடிவு என்று....??



ஏழைக்கு இல்லை இன்பம் 
இருப்பது யாவுந் துன்பம் 
கூழையே கண்டால் இன்பம் 
கொடுமைதான் வறுமைத் துன்பம் 
நாளையோர் விடிவை எண்ணி 
நலமுடன் வாழ எண்ணும் 
வாழை போல் மடியு மிந்த
மாந்தருக் கென்று இன்பம்.....?

மாடென உழைத்தே ஈற்றில் 
மனத்துயர் மட்டும் மிஞ்சும் 
பாடுகள் பட்டே பின்னால் 
பலனது பூஜ்ஜியம் தான் 
மாடியை நிமிர்ந்து நோக்கும் 
மனிதர்கள் இவர் களாலே 
மாடிகள் தன்னில் வாழ்வோர் 
வதிகிறார் பணத்துக்குள்ளே....!

குளுகுளுப் பான இல்லம் 
குடித்திட "உயர்ரகங்கள்"
வழு வழுப்பான காரில் 
வாழுவர், அவர்க்குச் சொர்க்கம் 
அழுகையே காணும் ஏழை 
அன்னவர்க் கிது நரகம்  
பழுவான வாழ்க்கைப் பேறு 
பார்த்திட வருவார் யாரு.....?

துணைவன் வேண்டும்


சீதனம் எதுவு  மில்லை
சீ ர்மைக்கு  பஞ்ச மில்லை
ஆதனம் அதுவும் மில்லை
அழகினில் குறைச் சலில்லை
பேதையென்வாழ்வில் ஒன்றாய்
பிணைந்திட வரனும் இல்லை !

கல்வியும் கற்றேன் - நல்ல
கனிவினை உளத்தில் பெற்றேன்
சொல்லினில் தெளிவு கொண்டேன்
சுயநலம் துளியும் இல்லை
நல்லதோர் துணைவன் என்னை
நாடியே வரவும் இல்லை

குடிசை தான் வாழ்க்கை - ஆனால்
கோபுரம் என்றன் உள்ளம்
நடிகையாய் வாழ்வில் மாறும்
நரித்தனம் எதுவும் இல்லை
அடிமையாய் என்னை அன்பால்
ஆண்டிட ஆளன் வேண்டும்

அந்நிய நாட்டுக் கென்னை
அனுப்பியே உழைக்கத் தூண்டி
தின்றிடத் துடிக்கும் பேயர்
தேவையே இல்லை - ஆண்மை
தன்னகம் கொண்டு வாழும்
தகைமை சேர் துணைவன் வேண்டும்.....!

உழைப்பிற்கு ஊதியம் தா....!


கூடையிலே கொழுந் தெடுத்தும் 
கூழுக்கே அடி பிடிகள் 
கோடையிலும் குளிரினிலும் 
கூடுதலை எம் நேரம் 
வாடி விடும், ஆனாலும் 
வயிற்றுக்கு வழியில்லை...!

உழைப்பதற்கு ஊதியத்தை 
ஒழுங்கின்றித் தருபவரும் 
பிழைப்பிற்கு வழியற்றுப் 
பெரும் பாவம் புரிபவரும் 
சளைக்காமல் வாழுகின்ற 
சந்தோஷ நேர முண்டு....!

நாளை வரும் என்று மனம் 
நம்பிக்கை கொண்ட தெலாம் 
பாழாகிப் போன தந்தோ 
படித்திட்ட மாந்த ரெலாம் 
ஏழைகளை எந் நாளும் 
எரிச்சலுடன் நோக்குகிறார்.....!

நாட்டிற்கு முது கெலும்பு 
நாமென்று வார்த்தைகளால் 
பாட்டிசைத்து வாழுகின்ற 
பாவிகளே, எங்களது 
வீட்டிற்குப் பணம் தேவை 
வியர்வைக்குப் பணம் கொடுங்கள்....!

மனமாற்றம் வேண்டும்.....!


எழுத்தாளர் என்கின்றார் எழுதுவோருள் 
இவர் தானாம் மாமன்னர் செப்புகின்றார் 
"பழுத்தபழம்" போற் பேசும் இவரோயிங்கு
படைத்தவையின் பட்டியலோ பூஜ்ஜியம் தான் 
அழுத்தமுடன் எதைச் சொன்னார் புதுமையாக....?
அசலுண்மை கடல் நீரா உப்பு என்றார் 
வெளுத்த நிறம் பாலென்றார்  வானில் நீந்தும் 
வெண்ணிலாவின் ஒளி தன்மை என்று சொல்வார்....!

"நா" மெத்தத் தடித்ததனால் "நான்" நானென்று 
நலங்கெட்டவார்த்தைகளை கொட்டுகின்றார் 
"பா" மெத்தப்படைத்தளித்த பாவாணர் போல் 
பல மேடைகண்டவர் போல் பகருகின்றார் 
காமத்தைக் கருவாக கொண்டு ஏதோ 
கண்டபடி நாலைந்தைக் கிறுக்கியுள்ளார் 
நாமத்தை அச்சினிலே "பெரிதாய்ப்" போட
நாய் படாப்பாடு பல படுகின்றாரே.....!

பெண்ணழகை கவி செய்வார் பெண்களே இப் 
பெருவுலகில் பெறென்றும் சாற்றி நிற்பார்  
பெண்ணொருத்தி எழுத்துலகில் முன்னே நிற்கப் 
பித்தரிவர் "பெருமானது" இடங் கொடாது 
வண்டமிழைக் கொண்டு இவர்வசைகள் பாடி 
வருத்தமுறச் செய்திடுவார் வார்த்தையாலே 
மண்டைதனில் கணம் கொண்டார் அறிவைத்தீட்டி 
மனமாற்றம் பெற்றுய்ய வேண்டுகிறேன்.....!

துணிவு வேண்டும்


முயற்சியே எங்கள் பாதை 
மகிழ்ச்சியே தேடும் இல்லம் 
உயர்ச்சியே அடையும் ஊராம் 
உணர்ச்சியே பயணத் தேராம் 
அயர்ச்சியை எதிரிப் படையாய் 
அழித்து நல் இன்பம் காண்போம் 
வியர்வையை வீர வாளாய் 
வீசியே உழைத்து வெல்வோம்....!

கெட்டதாம் முயற்சி காணாக் 
கடமையில் தூய்மை சேரின் 
திட்டமாம் கொள்கை நன்றாய் 
தீட்டிடும் வெற்றி பாரீர்
தொட்டவை பொன்னாய் மாறத் 
துணிவு தான் வேண்டும் இங்கே 
விட்டது அகலும் வினைகள் 
வாழ்வது பூக்கும் சிறந்து......!

அடுப்பெல்லாம் எரிந்து பசியை 
அழித்திடும் உறுதி வேண்டும் 
துடுப்புகள் இளைஞர் நாமே 
திருப்பணி தொடங்கி வாழ்வின் 
வடுக்களை களைத்து எங்கும் 
வெளிச்சத்தை விதைக்க வேண்டும் 
கொடுந்துயர் நீங்கி 
யார்க்கும் களிப்புறும் விடியல் வேண்டும்.....!

மழை தரும் மேகம் பார்ப்பீர் 
மண்வளச் சிறப்பை பார்ப்பீர் 
பிழை தராக் கல்வி நெறிகள் 
படிகளாய் உயர்வு காட்டும் 
இளைஞரே எழுவீர் எங்கள் 
இலட்சிய நோக்கம் உழைப்பு 
அழைக்கிறேன் வாரீர் உயர்ந்து 
ஆக்குவோம் நிம்மதி வெளிச்சம்.....!

கரையினில் ஆளைத் தொழில்கள் 
நிரமோடு கண்டோம், இன்னும் 
கரையிலாக் கடலில் புகுந்து 
கொள்ளுவோம் செல்வத் தொழில்கள் 
விரைவுறச் செய்வோம் அறிவால் 
விண்ணிலும் அடைவோம் வெற்றி 
நிறையெனத் திரள்வீர் கணமும் 
நன்மைகள் படைப்போம் நெஞ்சே.....!

வியாழன், 11 டிசம்பர், 2014

தென்றல் ( உருவகக் கதை)



காற்றுகள் பல வந்தும் 
கலங்கிடாமல் நிற்கின்ற 
ஆற்றலுள் ளொன் நானென்று 
அகங்காரம் கொண்ட ஒரு 
வாட்டமுள்ள ஆல மரம் 
வாழை யொன்றை நோக்கியது

சிறியவனே நீ இந்தச் 
செகத்தினிலே வாழ்ந்து விடும் 
அரு கதையோ சில காலம் 
அறிவாயோ என்று ரைத்துப்  
பெருஞ் சத்தம் போட்டுத் தன் 
பேரிரைச்சலைக் காட்டியது 

வாழை மரமோ வாய்திறவா (து)
வருத்தமுடன் நிற்கையிலே 
காலையிலே வீசிய புயற் 
காற்றதனால் எதிர் நின்ற 
அவவால மரம் விழுஞ் சத்தம் 
அவ்  வாழைக் கொலித்ததுவாம் 

ஒற்றுமையாய் வாழ்வோம்



பாரினிலே ஏராளம் பிரச்சி னைகள் 
பார்த்து விடும் போதினிலே எந்தனுக்குள் 
தீராத கவலையோ விண்ணை முட்டும் 
சித்தம் மிகக் கலங்கி மிக்க துயரம் நீட்டும் !

இன மத பேதங்கள் தலையைத் தூக்கி 
சாக்கடைக்கும் கீழாகச சமூகந் தன்னை 
விதியாலே நின்று மிங்கு எதிரா யாக்கி 
நெஞ்சத்தில் கடுந் துயரை நிறையச் செய்யும்!

ஆதனால் சொதரர்காள்அகிலந் தன்னில் 
அனைவருமே ஒற்றுமையால் வாழ்ந்து விட்டால் 
பூ தலத்தில் ஏதுதுயர் எண்ணி டுங்கள் 
புண்ணியங்கள் சேர்வதற்கு உழைத்தி டுங்கள் !

நயமடைவார்


ஒவ்வொரு மனிதனும் தன் மனப் போக்கின்
படி ,செய லா ற்றுகிறான் - ஆம்
இவ்வுல காளும்  இறைவனோ நாம் செலும்
பாதையை  மாற்றுகிறான்

மனத்தின் இச்சைக்கு மதிப்பு கொடுத்து
நடப்பவன் வழி  கெடுவான் - எக்  
கணத்திலும்  மனத்தை  கட்டுப் படுத்தி
வாழ்பவன் மகிழ்ந்திடுவான் !

முரணான வழியில்  இன்பங் காண
முனைகிற மனத்தாலே - மனிதன்
பரமனின் கோபப் பார்வையிற் படுவான்  
தன் சிறு குணத்தாலே !

மனமோ ஆன்மாவுக்குள்  ளிருக்கும்
சுதந்திரப் பொருளாகும் -அதைத்
தினமுஞ் சரிவரப் பேணிடா விட்டால் 
துருபிடித் திருளாகும்!

மனத்தைக் கட்டுப் படுத்தும் - பலத்தை
உடையோர் ஜெயமுடையார் - நல்ல
குணத்தை கொள்கையை கொண்டவர் இருமை
உலகிலும் நயமடைவார் !

மானிடப் பிறவி



மகிமை மிக்கதோர் மானுடப் பிறவி 
அணுவிலும் நுண்ணிய கருவினில் இருந்து 
அன்னை வயிற்றினுள் அடக்கமாய் வளர்ந்து 
பத்துத் திங்களில் பாரிலே பிறப்பான்....!

இருண்ட சூழலை மாற்றிய பின்னே 
ஒளி உலகத்தை உவப்புடன் பார்க்க 
விழிகள் திறப்பான் விருப்புடன் கை கால் 
ஆட்டி மகிழ்ந்து அகிலத்தை ரசிப்பான்.....!

தத்தித் திரிந்து தளர்நடை பயின்று 
பள்ளிப் பருவ வாசல் ஏறி 
இளைஞனாகி என்றும் வனப்புடன் 
உலக அரங்கில் நடிப்பினைத் தொடர்வான்....!

குருடனாய்,செவிடனாய் குடிக்கு அடிமையாய் 
அறிஞனாய்க் கலைஞனாய் ஆயிரம் வேஷம் 
ஏதோ ஒன்றை இட்டுக் கொள்வான்
எல்லாம் மனம் போல் இகத்தில் செய்வான்....!

முதுமை தோன்றுமே நரைகள் தாவுமே,
பிள்ளையைப் பெற்றவன் பேரனைக் காண்பான் 
போகப் போக நடை தளர்ந்திடுவான் 
பூமியில் ஒரு நாள் உறுதியாய் இறப்பான்.....!

நல்லோர்க்கே சொர்க்கம்....!



 வாழ்க்கை என்பது சிறிதாகும் - அதில் 
வாழும் முறையோ பெரிதாகும் 
ஏழைக் கிரங்கி வாழ்வதுவே இனிய 
இஸ்லாம் தந்த நெறியாகும்....!

குடிசை வாழும் ஏழைகளும் - பெருங் 
கோடி சீமான் "ஹாஜி"களும் 
முடிவில் சமமாய் மண் மீது - நபி 
மொழிந்தவாறு "ஜனாஸா"வே....!

போட்டி பொறாமை புகு நெஞ்சம் - பெரும் 
பொல்லாப் பழிகள் உறை மஞ்சம் 
 "ஷைத்தான்கள்" - உடன் 
அகற்றி வாழல் அறமாகும்.....!

பெண்ணே வாழ்வின் கண்ணாகும் - அவள் 
பெருமையின் அளவோ விண்ணாகும் 
இன்னல் தன்னை அவர்க் கூட்டல் - உயர் 
இஸ்லாத்திற்கே முரணாகும்.....!

ஏழைப் பெண்ணைக் கரம்பிடிப்போன் - தூய 
இறையோன் கருணைதனைப் பெறுவான் 
நாளும் பொழுதும் அன்புடனே வாழும் 
நல்லோர்க் கென்றும் சுவர்க்கம் மெய்......!

புதன், 10 டிசம்பர், 2014

எழுவோம் இளைஞர்காள்....!



சோம்பலைக் கொள்வோம் நல்ல 
சுறு சுறுப்புதனைக் கொள்வோம் 
வீம்புகள் பேசிப் பொழுதை 
விரயமே பண்ணல் விட்டு 
நாம் தொழில் செய்வோம் இந்த 
நாட்டையே உயர்த்தி வெல்வோம்.....!

பாழ்நிலை மாற்றி யிங்கோர்
பசுமையே பூக்கவைப்போம்  
ஊழ்வினைப் பயனே என்று 
ஒடுங்கிய நிலையைக் கீழே 
வீழ்த்தியே வெல்வோம் வாழ்வில் 
வெற்றியே சொந்தம் கொள்வோம்.....! 

சடைமுடி வளர்ப்பதாலே 
தரித்திரம் தீர மாட்டா 
உடைகளை மேல் நட்டார் போல 
உடுப்பதால் பயனொன்றில்லை 
மிடிமைகள் தீர வேண்டில் 
வீரமாய் உழைத்தல் வேண்டும்.....!

இளைஞரின் வடிவமன்றோ 
இவ்வுலகத்தின் சக்தி....?
களைப்பினை விட்டு வீசி,
கனிவுடன் உழைப்பை எண்ணி 
இளைஞர்காள் எழுவோம் நாளை (ய)
இனிமையை இன்றே காண்போம்....!

நாங்கள்....!


கூரையிலே ஆயிரங்கண் கொளுத்தும் வெய்யில்
குடியிருக்கும் உல் வீட்டில் மாறி காலம்
வாடையிலே உடலுறைந்து போகும் எங்கள்
வாழ்க்கையெல்லாம் துன்பமாய் மாறிப் போகும்

பாயில்லை படுப்பதற்கு எழுந்து நாங்கள்
பசியாற உண்பதற்கு உணவு மில்லை
நோயில்லா வாழ்வெமக்கு அமைய வில்லை
நொடிப் பொழுதும் எமையின்பம் தழுவ  வில்லை

கால் வயிற்ருக் கஞ்சிக்கும் கடும் போராட்டம்
கருணையிலா சமூகத்தில் நாமோர் கூட்டம்
ஏழ்மை நிலை தானெமக்குத் தோழ ராகும்
இம்மையிலே நமது இடம் நரகமாகும்

பசிவரமே மாத்திரிகைகள் உண்போர் வாழும்
பாரினிலே வாழுகிறோம் தனவந்தர்கள்
வசிக்கின்ற வீட்டினிலே நாய் களுண்ணும்
வகையான உணவுகளும் எமக்கு இல்லை

பெற்றெடுத்த செல்வரினைக் கல்வி என்னும்
பெருங் கடலில் நீந்த வைத்துக்கரையில் சேர்க்க
பற்றெமக்கு மிகவுண்டு பணத் துடுப்பு
பகையாகிப் போனதானால் வீணில் வாழ்ந்தோம்

இத்தரையில் எமைப்போன்ற மாந்தர் தம்மை
ஏன் படைத்தான் இறைவனும் உயிரைத் தந்து
நித்தமுமே துயரத்தில் ஆழ்த்தி விட்டு
நித்திரையா செய்கிறான் நம்மைவிட்டு

நித்திரையோ செய்யவில்லை நிமலன் விட்டு
நெறியில்லா மாந்தர்கள் புரியும் சதியால்
இத்தரையில் கிடந்தது நாம் உழலல் எல்லாம்
இனியுந் தான் மாறிடவே வழிகள் காண்போம்


குளிர்ந்த மலைகள் சிவப்பேறும்....!



முத்து,கருப்பன்,மூக்காயி - எங்கள்
முனியன்,வேலு,முருகாண்டி...!
கொத்திப் பிளந்தனர் மலையினையே
கூடை சுமந்தனர் முதுகினிலே......!

எறும்பு போலச் சோம்பாது - நிதம்
எந்திரம் போல உழைத்தனாராம்
கரும்பு,கதலி,கனி மரங்கள் - நல்ல
காய்கறி யாவும் விதைத்தனராம்

ஆணும் பெண்ணும் சமமாக - அங்கு
ஐக்கியமாக உழைத்தனாராம்
பாணும்,பருப்பும் பசிக்குண்ண    - அவர்
பறந்து உழைத்து மெலிந்தனாராம்

கொட்டும் மழையும் குளிரும் பனியும் - நன்கு
கொளுத்தும் கொடிய வெய்யிலினிலும் ;
அட்டைகளிரத்தம் குடிக்கையிலும் - அவர்
அனுதின மோயா துழைத்தனராம்

ஓட்டை "லயத்தில்" உறங்கிடினும் - நிதம்
ஓயா துழைப்பில்  இறங்கினாராம்
காட்டை அழித்துக் கழனிகளாய் - அவர்
கடிய உழைப்பால் மாற்றினராம்...!

உதிரம் தன்னைத் தேயிலைக்கே -
நல்ல உரமாய் இட்டு வளர்த்தனராம் !
மதுரமான தேனீரும் - அந்த
மாண்பினைக் கூறிச் சிவந்ததுவாம்...!

மாடாய் உழைத்து ஓடாகி - அந்த
மன்னர்க் கெல்லாம் தோய்ந்தனராம்
கேடாய் உழைப்பைத் திருடியவர் - நன்கு
கீர்த்தி பெற்று உயர்ந்தனராம்

இந்த -
கொடுமை நெருப்பைத் தாங்காது - அந்த
குளிர்ந்த மலைகள் சிவப்பேறி...!
திடமாய் வெடித்துத் தான் சிதறும் - ஈனத்
திருடர்  வாழ்வை குடித்து வைக்கும்...!

அண்ணலை நினைத்து வாழ்வோம்....!



சிலைகளை வணங்கி மாந்தர் - அன்று 
சீரழிவுற்றார் என்றோ 
மலையொளிர் நிலவாய் எங்கள் - தூய 
மா நபி வந்தார் மண்ணில்.....!

அறிவினை மறந்தே அன்று - பெண்ணை 
அழித்தனர் சிசுவில் கொன்று 
நெறியுயர் தீனைக் கொண்டே - நபி 
நிலத்தினை வளர்த்தார் நன்றே.....!

இஸ்லாம் என்னும் தூய - இறை 
நிதியினை மண்ணுக் கீந்து 
ஜாஹிலியர் செய்தீமை - கொடும் 
அனலினை அணைத்தார் தாமே.....!

தொல்லைகள் கடலின் மேலாய் - இங்கு 
துலங்கியே நின்ற காலை 
எல்லையில்லாத இன்ப - உயர் 
இஸ்லாம் தனை விதித்தார்.....!

மண்ணிலே இஸ்லா மென்னும் - எங்கள் 
மாமறை வளர்த்த செம்மல் 
அண்ணலார் நபியை நாமும் - இங்கு 
அனுதினம் நினைத்து வாழ்வோம்.....!

கல்வித்தாய் அருள வேண்டும்



துள்ளி வரும் வெள்ள மென கல்வித் தாயே 
தூயமனத் துள்ளறிவை அள்ளித் தாவேன் 
கள்ளமிலா என் நெஞ்சில் கல்வித் தாயே 
காதலுடன் கலந்துயர்வு பெற்றுத்தாவேன்....!

ஏற்றமுடன் நான் செய்யும் பணியை சிலபேர் 
இயலாமையால் இகலும் நிலையைக் கண்டேன் 
தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து யானும் 
தூய பணி புரிந்தவுடன் சுடரைத் தூவேன்....! 

காலமெலாம் காசினிக்கு ஏற்றதாக 
கனிவோடு பணி புரியக் கருணை செய்வாய் 
சீல மோடு வாழ்ந்திங்கு தேவை மட்டும் 
திருத்தமுடன் புரிய அருளைத் தாவேன்.....!

பொங்கி வரும் கல்விக்கு நிகரா யிந்தப் 
பூதலத்தில் ஒரு செல்வம் வேறேதுண்டு 
தங்க நிகர் கல்வித் தாய் அருளவேண்டும் 
தரணியிலே தலை நிமிர்ந்து வாழவேண்டும்......!

இறைவனருளை நாடு.....!


மண்ணகத்தில் மதி மயங்கி,
வாழுகின்ற மனிதா 
எண்ணிப் பாரு இதயந் தன்னில் 
இருளை வைத்தால் இனிதா.....?

மரணமுண்டு வாழ்க்கையிலே 
மறந்து நிற்றல் சரியா.....?
இறைவனருள் தன்னை நாடி 
இனிமை பேணு நெறியா (ய்)

உலகந் தன்னில் உன்னை யாஅல்லாஹ் 
உயர்வதாகப் படைத்தான் 
கலகம் பண்ணிக் களவு செய்து 
காசினியைக் கொடுத்தாய்.....!

கடமை ஐந்தை நீ மதித்து 
கடவுருளைப் பெறுவாய் 
உடமை புனித இஸ்லா மென்று 
உணர்ந்து ஏற்று உயர்வை....!

செகத்தை விட்டு ஏகும் போது 
சேர்ந்து என்ன பெருகும்.....?
இகத்தில் செய்த நல் அமல் தான் 
இணையும் அறிந்து ஒழுகு......!

முடிவினி மரணம் ....!



துள்ளினேன் இளமை வாழ்வில்,
துயரினைத் தூர விட்டேன்
பள்ளியில் படித்த பின்னே 
பதவியும் வந்த தாலே 
கொள்ளையாய் இன்பந் தேடி 
குவலயம் தனில் - அலைந்தேன்.
உள்ளத்தே கோடி ஆசை 
உதித்தது செயலில் செய்தேன்.......!

ஆடினேன் அரங்கில் - புகழை 
அங்கும் யான் தேடிக் கொண்டேன்,
சூடினேன் வெற்றி வாகை 
"கலை" யென வாழ்வைக் கொண்டேன் 
தேடினேன் செல்வம் கோடி 
திருப்தியோ; எனக்கு இல்லை 
நாடினார் பல்லோர் என்னை 
நாடினேன் இன்பம் தன்னை......!

வதுவையும் செய்தேன் வாழ்வில் 
வரமெனக் குழந்தை பெற்றேன் 
மதுவினைக் கூடத் தொட்டேன் 
மங்கையைத் தேடிச் சென்றேன்,
எதுவுமே விட்டேன் என்று 
எண்ணுதற் இல்லை இன்றோ,
முதுமையில் நோயில் வீழ்ந்தேன் 
முடிவினி மரணம் தானே......!

செவ்வாய், 9 டிசம்பர், 2014

ஓர் ஒற்றைக் குயிலின் ஓலம்.....!



சோலையிலே ஓர் ஒற்றைக் குயில் 
சோகக் குரலிலே கூவுதடி 
மாலையிலும் அதிகாலையிலும் - அது 
வாடி மனம் வெந்து கூவுதடி.....!

சின்னஞ் சிறு பராயத்திலே 
சேர்ந்த துணை மறைந்தோடியது 
வண்ணக் கருங்குயில் தன்துணையை - கிட்டே 
வாவென்ற ழைத்துமே கூவுதடி.....!

கொஞ்சிக் கலந்துமே மாமரத்தில் 
கூடித் துளிர் கொய்து பாடியதும் 
நெஞ்சிற் கனவுகள் கூடிடவே - அன்று 
நித்தம் குளிர்ந்ததை எண்ணுதடி.....!

சோலையிலே பறந்தோடிய தும் 
சொர்க்கமென ஓன்று கூடியது 
பாலையருந்திப் பழஞ்சுவைத்தே - காதற் 
பாடலிசைத்ததைக் கூவுதடி.....!

சொந்த அனுபவம் யாவு மின்று 
சொப்பன மாகவே போன தெண்ணி 
வெந்து மிக நொந்து கூவுதடி - அதன் 
வேதனை என்று தான் தீருமடி......?

அபிவிருத்திக்கு இளைஞர் சக்தி



எழிலுறு உலக மாதா 
இதமாய் இளைஞர் சக்தி 
தொழிலெனும் கருவி கொண்டு 
துரத்துதல் ஆகும் பொல்லா 
இழிவிருள் வறுமை தன்னை 
இரவியை மிளிரும் தூய 
இளைஞரே ஓன்று கூடி 
இன்பமாய் உழைக்க வாரீர்.....!

பள்ளியில் படித்தோம் மேன்மை 
பட்டங்கள் பலவும் பெற்றோம் 
கொள்கையில் உறுதி பூண்டு 
குவலயம் தன்னை மீட்க
தெள்ளிய உணர்வினோடு 
திறம்பட உழைத்து மண்ணை 
வெள்ளிடை மலையாய் என்றும் 
விளங்கிட வைக்க வாரீர்.....!

காடுகள் மாய்த்து நல்ல 
கழனிகள் உண்டு பண்ணி 
மேடுகள் வளம் படுத்தி 
மேன்மை சேர் பயிர் வளர்த்து 
வாடிய முகங்கள் யாவும் 
வசந்தமே கண்டு பாடி 
கூடியே மகிழ்ந்து வாழ 
கூவியே உழைக்க வாரீர்.....!

ஏர் பிடித்தொழுவோம் நல்ல 
எந்திரம் துணையாய்க் கொள்வோம் 
போர்வைகள் தம்மை நீக்கி 
புதுமைகள் உழைப்பில் செய்வோம் 
கார் மழை தன்னை தேக்கி 
காசினிக் குத்தவும் வண்ணம்
சீர்மையை பயிர்க்குப் பாய்ச்சி 
செகமது செழிக்கச் செய்வோம் ....! 

 தேயிலை இறப்பர் தெங்கு 
சிறந்திடும் வயலின் நெல்லு 
ஆயநற் கனிகள் நூறும் 
அறு சுவைக் குதவும் யாவும் 
நேயமாய் வளர்ப்பதாலே 
நிலத்திடை வளங்கள் கூடும் 
சாய்ந்திடும் கதிர் வளர்த்தால் 
தலையை நாம் நிமிர்த்தலாமே.....!

இளைஞர் கை இணைந்தா லிங்கு 
எந்கிலை அபிவிருத்து.....?
வளைக்கரம் வாளை ஏந்தி 
வயற் கதிர் அறுக்கும் போதும் 
களை தனைப் பிடுங்கி வீசிக் 
காரிய மாற்றும் போது 
சளைத்துப் போம் வறுமைக் கோடு 
காணுமே வளத்தை நாடு......!

உயர்வுக்கு இளைஞர் சக்தி 
ஓன்று பட்டிணையு மானால் 
நயம் பல வந்து கூடும் 
நலிவுகள் மறைந்து ஓடும் 
புயங்களை உயர்த்தி யிந்தப் 
பூமியை பசுமை யாக்க 
செயற் பட எழுவீர் எங்கள் 
இளைஞரே நாமே சக்தி.....!

வாழும் வழி....!



நடந்ததை நினைத்து வருந்தாமல் - இனி 
நடப்பதில் கவனம் செலுத்தி விடு 
உடைந்த பாத்திரம் ஒட்டுமுன்னம் - நல்ல 
உயரிய பாத்திரம் படைப்பது மேல் 
 இடரினைக் கண்டு அஞ்சாது - அதை 
இதய பலத்துடன் எதிர் கொள்ளு 
இறைவனைத் துதித்துக் கண்ணியமாய் - தினம் 
கடமையைச் செய்து உயர்வடைவாய்.....!

போன "பொழுதுகள்" - திரும்பாது என்றும் 
பொய்களும் நிலைத்து வாழாது 
மானங்காத்து வாழ்பவரை - இங்கு 
மன்பதை என்றும் மறக்காது 
தேனாய் வாழ்வை அமைப்பதற்கு - நிதம் 
திடமே வேண்டும் நெஞ்சத்தில் 
வானும் மண்ணும் நம் சொந்தம் - என்று 
வாழ்ந்தால் இன்பம் உலகுய்யும்.....!

சாதிபேதம் தொலைத்தே தான் - நல்ல 
சமத்துவம் வளர்த்தல் பணியாகும் 
நீதி நேர்மை செயல்நுட்பம் என்றும் 
நெஞ்சில் அன்பு தனை வளர்த்து 
மேதினிதன்னில் ஒற்றுமையாய் - நல்ல 
மிடுக்கை வாழ்வது வாழ்வாகும் 
சாதனை வேண்டும் வாழ்க்கையிலே - வரும் 
சந்ததி வாழ்த்த வாழ்த்திடனும்.....!

விளையாட்டுக் கலை வளர்ப்போம்



உடலோடு உளத்திற்கும் வலு வளித்து 
உறவாடி ஒற்றுமையை வளரவைத்து 
திடமான சமுதாயம் வளர்வதற்கு,
தேவை நல விளையாட்டுக் கலைகள் என்றும் 

சோம்பலோடு சோர்வுதனை மறந்து வாழ 
சுறு சுருப்பால் உடலுளத்தில் நிறைவு தோன்ற 
"நாம்" என்ற நிலை வளர்த்து நலம் விளைக்க 
நாட்டினிலே விளையாட்டுக்கலை வளர்ப்போம் 

செகமெங்கும் சென்று விளையாடி நிற்போம் 
சிரித்த முகத்தோடு கை கோர்த்து வைப்போம் 
நாகத்தொடு தசைபோல நல்லுறவை 
நாம் செல்லுமிடமெங்கும் நாட்டி வைப்போம் 

வெற்றிக்கு முதற்படியே தோல்வி என்று 
விளையாட்டில் சளைக்காது முயன்று வெல்வோம் 
கற்றிடுவோம் "கிரிகற்றை" காற்பந்தோடு 
கரப்பந்து வலைப்பந்து பூப்பந்தெல்லாம் 

நட்புறவு சோதரத்துவம் நல்லிணைப்பு 
நல்லபடி அகிலத்தில் வளர்வதற்கும் 
கட்டுப்பா டொழுங்கனைத்தும் நிலைப்பதற்கும் 
கனிவோடு விளையாட்டுக் கலை வளர்ப்போம் 

திங்கள், 8 டிசம்பர், 2014

ஒற்றுமை.....!


இதயத்தில் இருள் தன்னைக் களைந்தெடுத்து - நல்ல
இசை தரும் வீணையாய்க் குடைந்தெடுத்து 
உதயத்தில் பூபாளம் மீட்டிடுவேன் - உன் 
உயர்வுக்கு நல்வழி காட்டிடுவேன்......!

தீமையை முளையிலே தீயிடுவேன் - எந்த 
தீயவர் வாழ்க்கையையும் திருத்திடுவேன் 
ஆமை போல் அமைதியாய் வாழச் சொல்வேன் - நெஞ்சில் 
ஆறுதல் வார்த்தைகள் கூறி வெல்வேன்......!

பேசும் மொழி உயிர் மூச்சு என்பேன் - மனிதர்க்குள் 
பேதைமை பாராதார் உயர்ந்தோரென்பேன் 
கூசும் நா வேற்றுமை கூறி நின்றால் - மனிதா 
கூடி நாம் வாழ்ந்தா லோர்குறை வருமோ.....?

எல்லா குருதிகளும் ஒரு நிறமென்பேன் - அவற்றை 
இறைவனும் ஒன்று என்பேன் 
இல்லை என்றால் தெய்வம் இவ்வுலகிலில்லை - மனிதா 
அல்லாஹ் துணையின்றி ஏதுமில்லை.....!

ஜாதிகள் ஆண்  பெண் இரண்டு என்பேன் - இங்கு 
யாவரும் சரி சம மாந்தரென்பேன் 
நீதி நிலை கெட்ட மனிதர்களை - கண்டு 
நெஞ்சமே நெருப்பாக வேகுதடா....!

ஏழையர் யாவரென் உடன் பிறப்பே - அவர் 
ஏற்றம் காண சேவை செய் திடுவேன்....!
கோழையாய் வாழ்வதை நான் வெறுப்பேன் - அவர் 
குறுக்கு வழி சென்றால் நான் தடுப்பேன்....!

அன்பு தான் என் மனச் சாந்தி யென்பேன் - அதை 
இதயத்தில் வைத்து நான் பேணிடுவேன்
பண்பான மாந்தரை வரவழைபேன் - கவி 
பாவாலே அவர் வாழ வாழ்த்துரைப்பேன்.....!  

கலைந்தோடும் நெஞ்சங்கள் துணையிருப்பேன் 
நிலையில்லா வாழ்வில் நான் நிறைந்திருப்பேன் - எந்த 
நிலை வந்த போதும் நான் - வாழ்வில் 
செய்ந் நன்றி மறவாமல் வாழ்ந்திருப்பேன்.....!

கூடாதே கூடாத கூட்டத்திலே - உன் 
குணம் கெட்டுப்போகும் அக் கூட்டத்தினால் 
நாடாதே மது மாது சூது கொலை தன்னை - அவை 
நாளெல்லாம் உன் வாழ்வை அழித்தொழிக்கும்....!

கண் முன்னே கயவரைக் கண்டேனென்றால் - நான் 
காறியவர் முகத்தின் முன் உமிழ்ந்திடுவேன் 
என் மனத் தோட்டத்தில் ஏங்குகிறேன் - நாட்டில் 
இன மூன்றும் ஒற்றுமை காண்பதென்று......?

பொல்லாத காலமினி மாற வேண்டும் - அதில் 
போலிகளும் புரட்டல்களும் ஒழிய வேண்டும் 
இல்லாமை நிலை முற்றாய் மாற வேண்டும் - பொருள் 
இருப்பவர் இல்லாருக்கு ஈய வேண்டும்.....!

இந்த நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும் - இங்கே 
இன மூன்றும் ஒற்றுமை காண வேண்டும் 
வன்முறையால் நன்மைகள் சேர்க்கலாமோ? - நல்ல 
வழி கண்டு அமைதி நிலை நாட்டலாமே.....!

சுமக்கின்றாள்...!



கொட்டும் மலையில் குளிரும் பனியில்
கோதை தோய்ந்து மலை மீது
எட்டி நடந்து இலைகள் கொய்து
ஏங்கும் நெஞ்சம் மிக நோக 
அட்டை களிரத்தம் குடிக்கும் போதும்
அவளோ கூடை சுமக்கிறாள்....!

உதயம் தொடங்கி மாலை வரைக்கும்
உழைக்கும் கைஏகள் ஓயாது
சதையும் எலும்பும் குளிரில் உறைய
சாவுக் கஞ்சா மன தோடு
விதி தான் வாழ்க்கை என்றே நொந்து
விழி நீர் சிந்தி நடக்கிறாள்....!

பள்ளி செல்லும் வயதில் ஏழ்மைப்
பளுவைத் தானே சுமக்கிறாள் 
கல்வியில்லா வாழ்வை எண்ணிக்
கலங்கி மலையில் தவழ்கின்றாள்
அல்லும் பகலும் உழைத்தும் ஓட்டை
"லயத்தில்" உறங்கா திருக்கின்றாள்...!

தொட்டிற் குழந்தை "ஏணைக்குள்ளே"
தூங்க வைத்தே அதைப்பிரிந்து
எட்டாதுயர்ந்த உச்சி மலையில்
ஏறிக் கொழுந்து மிகக் கொய்தும்
வாடும் நிலையை நாளும் கொண்டு
வறுமை தனையே சுமக்கின்றாள்...!

புனிதத் திங்கள்....!


மாண்புடன் பொழியும் "ரமழான்"
மாதமோ "ரஹ்மத்" தாகும் 
நீண்ட நாள் பாவம் யாவும் 
நீக்கிடும் புனிதத் திங்கள் 
பூண்டிடும் தர்மக் கொள்கை 
பூமியில் மலியப் பண்ணும் 
ஆண்டியோ டரசன் சேரும் 
அறத்தினை வளர்க்கும் மாதம்.....!

வஞ்சகம் பொய்மை மாந்தர் 
வாழ்வினை அழிக்கும் சூது 
நஞ்செனும் செயல்கள் யாவும் 
நலமுடன் அறவே நீக்கி 
நெஞ்சினில் அன்பு பாசம் 
நிறைந்து மே மாந்தர் யாவும் 
ஒன்றென மறையோன் வேதம் 
ஓதியே வாழும் மாதம்....!

ஆயிரம் இரவில் காத்து 
அருந்தவம் புரிந்து ஈற்றில் 
நேய (இ) ரா! "லைலத்துல்கத்ர்" இந் 
நிலமிசை அருளைப் பொங்கும் 
தூயதாய் துன்பம் நீங்கித் 
துலங்கிடும் ரமழான் தன்னை 
நேயமாய் வருக வென்றே 
நெஞ்சினால் வர .வேற்கின்றோம்....!


வரும் மாற்றம்....!


உப்பு நன் நீருள் வீழ்ந்தால் 
உடன் கரைந்தழியுமாப் போல் 
ஒப்பிலா நட்பும் பொய்மை 
குருக்கிடில் அழிந்து போகும்....!

ஒளியது மறைந்து போக 
உறைந்திடும் இருளைப் போல 
வளர்ந்த நல உறவும் தேயும் 
வளரும் சந்தேகத்தாலே 

ஒரு மொழி பேசும் நல்ல 
ஈரின மாந்தர் நம்முள் 
பிரிவினை எதனால்.....? நல்ல 
புரிந்துணர் வற்ற தாலே 

"சீதனம்" தன்னைச் சாடி 
சீற்றமாய் எழுது வோரும் 
காதலை மறந்து "காசைக்"
கண்டிடில் மாறுகின்றார்.....!

நெஞ்சினில் அன்பு பாசம் 
இறைவனின் மாறா நேசம் 
விஞ்சிய கல்வி நாட்டம் 
விதைந்திடும் உலகில் மாற்றம்....!

கேவலம் வேண்டாம்......!



ஆடையைத் திருத்து நல்ல, 
அழகுடல் மறைத்து நில்லு
கேடடி உடலைக் காட்டும் 
கேவலம் வேண்டாம் சொல்லு.....!

அரிவையுன் உடலை றோட்டில் 
அளி விழி விருந்தாய் ஆக்கி 
சரிவதேன் பண்பை விட்டு 
தனித்துவ மரபைக் கூட்டு.....!

தொடை இடை தொப்புள் என்று 
தொகையுன் வனப்பை எல்லாம் 
கடைதனில் பொருளாய் நீயும் 
காட்டிடும் நிலையை மாற்று......!

தாய் வழி வந்த வுன்றன் 
தகமையாம் பண்பை மாற்றி 
பேய் நடை போடும் பெண்ணே 
பேதையே திருத்திக் கொள்வாய்.....!

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

அவைகள் மேலே....!



காட்டில் வாழும் மிருகங்கள் 
கயமை செய்யா உருவங்கள்,
நாட்டில் வாழும் மனிதரிலும் 
நலமே செய்யும் உருவங்கள்.....!

ஏட்டில் படித்த அறிவில்லை 
இறையைக் காணும் நெறியில்லை
காட்டில் கூடி வாழுகிற
காட்சி கூட நாட்டிலில்லை....!

உயர்வு தாழ்வு அவைக்கில்லை
உலகை ஆளும் ஆவலில்லை
கயமை மிருக வாழ்கையிலே
கானல் கூட அரிதாகும்....!

பொறாமை கொண்ட அகமில்லை
புரியுந் தன்மை அவைக்கில்லை
கருமை நெஞ்சத் திலுமில்லை
காட்டில் ஒன்றாய்க் கூடி வாழும்....!

உள்ளம் தன்னில் ஒரு எண்ணம்
ஒரு நாள் கூட வைத்து விடா(து)
கள்ளம் கொண்ட மனிதரிலும் 
காட்டு மிருகம் மேலாமே.....! 



தாய்மை அழகே அழகு......!



மழலையைத் தாங்கிச் செல்லும் 
மாதினில் உண்மையான 
அன்பினைக் கண்டேன் மண்ணில்
அழகெனிற் தாய்மை பேறே.....!

"குளு குளு" மழலை தன்னை
கொஞ்சிடும் அழகு -  மற்றும்
அழுகையைப் பாட்டினிலே
அணைப்பதும் அழகு காண்பீர்.....!

உலகினில் கருணை வெள்ளம்
உருகிடும் தாய்மை யுள்ளம்
மலரவள் குழந்தை பெற்றாள்
மலர்ந்திடல் மொட்டுத்தானே.....!

தாய்மையே பெண்மை வாழ்வில் 
தனிநிகர் கனிவு ஆகும்
கைகளா அழகு இல்லை 
கனிகளா அழகு சொல்வீர்.....!

விளை நிலம் அழகா சொல்வீர் 
வெறு நிலம் அழகா சொல்வீர் 
அழகில் தாய்மை மேலே 
அடுத்தவை யாவும் கீழே.....!

யாவரும் கேளீர்....!



சாதி மத பேத மின்றி 
சரி சமமாய் மனிதர் நாம் 
மேதினியில் ஒரு குடியாய் 
மிடுக்காய் நிமிர்ந்து வாழ்வோம்....!

சிறிய குருவிக் கூட்டமெல்லாம் 
சேர்ந்து இனிதே வாழ்க்கையில் 
அறிவிற் சிறந்த மனிதர் நாமும் 
அழிவுப் பாதை செல்வதா....?

உலகில் வாழும் மனிதர்க்கெல்லாம் 
ஓடும் குருதி ஒரே நிறம் 
கழகம் பண்ணிக் கடிந்து வாழ்தல் 
காட்டு விலங்கின் இழி குணம்.....!

பிறப்பில் மனிதர் எவருமிங்கு 
பெரிது சிறிது இல்லையே 
சிறக்கும் வாழ்வில் செயலில் நேசச் 
சிந்தையாலே உயருவார்....!

பலிகள் செய்து பாவியாகப் 
பாரில் வாழ்வோர் சிறியவர் 
தெளிந்த அறிவு அன்பினோடு 
சேர்ந்து இனிது வாழுவோம்......!


தாய்த் தமிழே வாழி...!


வள்ளுவர் இளங்கோ கம்பன் 
வழிதனில் புலவர் கோடி 
தெள்ளிய கவிதை பாடி 
தேனெனச் சுவைக்க நாமும் 
அள்ளியே பருகி இன்ப 
அருவியில் குளித்து நித்தம் 
தொல்லைகள் மறக்க வைக்கும் 
சுந்தரத் தமிழே வாழி....! 

பாரதி உமறு சித்திலெவ்வை நல்ல -
இக்பால், பாரதிதாசன் போன்றோர் 
ஆரமாய்ச் சூடி யுன்னை 
அளவிலா இன்பங் கண்டார் 
சேர்ந்திடும் வறுமை துன்பம் 
சிதைவுறு வாழ்க்கை கண்டும் 
சோர்ந்திடாதுன்னைப் பாடி 
சுகம் பல கண்டார் அம்மா....! 

வாழ்வினைத் துறந்தோர் கூட 
வடிவுனைத் துறந்த தாரில்லை 
தாழ்விலா நிலையிலிந்தத் 
தரணியோர் புகழ்ந்து போற்றும் 
நீள் பலம் பெருமை யோடு 
நித்தமும் வாழு மெங்கள் 
வீழ்வுறா மொழியே என்றும் 
வீறுடன் வாழ்க நீடு....!

உலக சமாதானமும் இளைஞனும்



விமான மொடு "ராக்கட்" ஏறி 
விண்ணகம் அளந்த போதும் 
இமாலய முகத்தைத் தொட்டு 
எளிதெனக் கண்ட போதும் 
சமாதானம் என்ற காற்று 
தரணியில் வீசும் வண்ணம் 
அமைதியைப் பேணும் பண்பு 
அகன்றிடில் இன்பமேது?

சாதியைத் தகர்த்து மண்ணில் 
சமத்துவம் தன்னைப் பேணி 
நீதியை வளர்த் துயர்த்தி 
நிலத்திடை அமைதி கண்டு 
சாதனை இதுவே என்று 
சகலரும் ஒன்று பட்டு
வேதனை அறுந்து சாய 
வினை செயல் இளைஞர்பங்கே...!

 வேர் அற மரங்கள் சாயும் 
வீழ்ந்திடும் இலைகள் காயும் 
நீர் இல்லாப் பயிர்கள் யாவும் 
நிச்சயம் வாடிச் சாகும்,
பார்தனில் வாழும் மக்கள் 
பண்புடன் சேர்த்து வாழும் 
சீர்மை தான் மறந்து போகில் 
செகந்தனில் அமைதி சாகும்....!

பூமியை சுவர்க்க மாக்கி 
பொலிவினை முகங்கள் தேக்கி 
தேமது ரத்து வெள்ளம் 
திரட்சியாய் எங்குமோட 
நா மெலாம் ஓன்று பட்டு 
நற்சமா தானந் தன்னை 
வாருடன் வளர்ப்ப தொன்றே 
வழி யெனக் கண்டு சேர்வோம்....!

இன மத வேறு பாடு 
இழி வெனக் கண்டு ணர்ந்து 
மனந் தனில் மனிதர் யாவும் 
ஓர் குளம் என்ற எண்ணம் 
கணிந்திடில் மோதல் யாவும் 
கரைந்துமே அமைதி பூக்கும் 
சினமது தீர்ந்து போனால் 
செக மெலாம் செழிப்புத் தானே.....?

அவர் மொழி அவரவர்க்கு 
அன்னையின் வடிவமாகும்
எவர் மனத் துள்ளு மிந்த 
எண்ணமே உறைய வேண்டும் 
சுவர்தனைப் போட்டு வீணே 
துயரினை வளர்த்தல் கூடா 
சுவர்க்கமே உண்டு பண்ண 
துணிந்தெழு இனைஞ நீயும்....!

சுதந்திரம் மானிடர்க்கு 
சொந்தமாம் என்ற வுண்மை 
நிரந்தரம் வாழு மாகில் 
நிலத்திடை அமைதி பூக்கும் 
இதமுடன் உலகு வாழும் 
இளைஞர்காள் ஓன்று கூடி 
நிதமிதை வளர்த்து மண்ணில் 
நிம்மதி காக்க வாரீர்....!

வெள்ளி, 5 டிசம்பர், 2014

கொடிய போர்ப் பேயே ஓடு....!



மண்ணிலே அமைதி யோங்க 
மனமெலாம் மகிழ்வு தேக்க 
புண்ணிய பூமியாகப் 
புலர்ந்திடப் போரே ஓடு....!

மனிதனை மனிதம் சாய்த்து  
மாண்பினை அளித்து வீழ்த்திச் 
சனியனாய் ஆட்டம் போடும் 
சண்டையே விரைந்து போ நீ....!

ஆயுத மேந்தி நாளும் 
அழிவுறும் அவலம் நீங்கி 
தாயுடன் பிள்ளை யாகத் 
தழுவிடப் போரே ஓடு....!

வீட்டினுக் கெரியை யூட்டி 
வீதியில் பிணத்தைக் கூட்டி 
கூட்டு வாழ்க்கையைக் கொள்ளும் 
கொடிய போர்ப் பேயே ஓடு.....!

அமைதியே சொர்க்க மாகும் 
ஆனந்த வெல்ல மாதே 
சம்ரெனும் கொடிய நோயே 
தரணியை விட்டு ஓடு.....!

ஓரணி சேர்வோம்




புதுப்புது இலக்கிய வடிவம் 
பொலிவுடன் பூமியில் படைப்போம்,
எதுசரி, எது பிழை எனவே 
ஆய்ந்தொரு முடிவினை எடுப்போம்....!

இலக்கியவாதிகள் மோதி 
ஈன நிலைக் கடிகோலி  
கலக்கிடும் போக்குகள் வேண்டாம் 
கை கோர்த் தொழுகுதல் வேண்டாம்....!

சுவைஜர் தம் மனப்பசி  தீர 
துயர் நிலை அடியோடு மாற 
சமைத்திடுவோம் நவ கலைகள் 
சாதனைக் கிங்கில்லை விலைகள....!

வீழ்ந்தவர் எழுந்திடும் வழிகள் 
விளம்பிடும் கவியோடு கதைகள் 
ஆழ்ந்த நல அறிவினைப் பிழிந்து 
ஆக்கிடுவோம் ஓன்று கலந்து....!

எழுத்தினுக் கெதிர் முனையாக 
இலக்கிய வாதியின் வாழ்க்கை 
பிழைபடும் இழிநிலை மாறி 
பிழையற ஒழுகுதல் வேண்டும் 

வாழ்வொரு சிறுதுளி அரிய 
வளர் கலை உலகினில் பெரிது 
பாழ் நிலை அகன்றிட உழைப்போம் 
படைப்பாளிகள் கைகளைப் பிணைப்போம்.......!

அந்த நாள் என்று வரும்



உழைத்துழைத்து நாமுந்தான் ஒடாய்த்தேய 
உழையாதார் ஊதித் தான் பெருக்கக் கண்டோம் 
இழைத்தே நாம் இடுப்பொடிய ஈரமில்லா 
இதையத்தார் இழுத்துறிஞ்சி மேலே சென்றார்.....!

முதுகினிலே கூடையினைத் தாங்கி நாமும் 
முதுகொடியக் கொழுந்தெடுத்துக் கொணர்ந்து சேர்த்தோம் 
புதுவாழ்வு எதுவும் நாம் கண்டதில்லை 
புல்லர்கள் வாழ்வுக்கே உரமாயப் போனோம் 

ஓட்டை "லயம்"தானெமது உலகும் வாழ்வும்,
உழைப்புத்தான் உயிர் எமக்கு,  
காட்டையெல்லாம் கழனிகளாய்ச்செய்தோம் எங்கள் 
கனவுகளோ கண்ணீரில் கரையக் கண்டோம் 

மலையகத்து இலைகளுக்கு பசுமை சேர்க்க 
மணிமணியாய் வியர்வையினை வடித்துத் தந்தோம் 
 எம் வாழ்வில் பசுமை பூத்து 
நிம்மதியாய் வாழும் நாள் என்று பூக்கும்

புதன், 3 டிசம்பர், 2014

ஹாஜிகளே வருக வருக...!!




ஐம் பெரும் கடமை தனி லொன்றை 
அழகுறு மக்கா நகர் சென்று 
பொய்மையில்லா நெஞ்சோடு 
புனிதமுடனே நிறைவேற்றி 
மெய்மை யிறை யோன் அருள் பெற்று 
மிளிரும் ஹாஜிகாள் வருக....!

புனித மதினா நகர் சென்று 
அண்ணல் நபியின் சியாரத்தை 
பெருமையாகத் தரிசித்தே 
பேறு  பெற்றே திரும்பி வரும் 
அரிய ஹாஜிகாள் வருக வருக 
அல்லாஹ் அருளால் நலம் பெருக.....!

"சபாமர்வா" இடைநடுவில் 
சந்தம் திகழும் "தொங்கோட்டம்"
சுபமாய் ஏழு முறை யோடிச் 
சுவைக்கும் "ஸம்ஸம்" தண்ணீரில் 
தாகம் தீர்த்து உளம் மகிழ்ந்த 
தகை சேர் ஹாஜிகாள் வருக....!  

மினா பள்ளத் தாக்கினிலே 
மேன்மை இப்றாஹீம் நபி செய்த 
தனயன் இஸ்மாயிலின் தியாகம் 
தம்முன் ஏற்று மன நிறைவாய்ப் 
புனிதம் பெற்ற ஹாஜிகளே 
புன்னகை சிந்தியே வாருங்கள்....!

ஹஜ்ஜினைப் புகழ்ந்து பாடுங்கள்......!


"ஹஜ்"ஜினைப் புகழ்ந்து பாடுங்கள்  - புனித 
"க / பா"   விலே ஓன்று கூடுங்கள்
இஸ்மாயில் நபியின் தியாகத்தை - நீங்கள் 
இதயத்திலே நினைவு கூறுங்கள்...!

"ஸம்ஸம்" தண்ணீரை அருந்துங்கள் - புனித 
தியாக நாளில் மனம் திருந்துங்கள் 
இம்மையிலே ஆறாம் பேணுங்கள் - முடிவில் 
இறையோனின் அருட்பதம் காணுங்கள்.....!

மக்காவில் சனவெள்ளம் பாருங்கள் - அந்த 
மாண்பினிலே களி கூறுங்கள் 
தக்கோராய்த்  தரணியில் வாழுங்கள் - இறையோன் 
தந்திட்ட குர்ஆனை ஓதுங்கள்......!

ஆடை அணிமணி பூணுங்கள் - தூய 
அல் - ஹஜ்ஜை ஏழையில் காணுங்கள் 
மூடத்தனங்களைச் சாடுங்கள் - நல்ல 
மூ /மின்கள்  அறவழி நாடுங்கள்....!

இஸ்லாம் வழி சென்று உய்யுங்கள் - நல்ல 
இதயமுடன் "ஸக்காத்" செய்யுங்கள் 
கசியும் உளங்கொண்டு நில்லுங்கள் - ஏழை 
கண்ணீரைத் துடைத்தின்பம் கொள்ளுங்கள்.....!

"ஹஜ்"ஜினைப் புகழ்ந்து பாடுங்கள்  - புனித 
"க / பா"   விலே ஓன்று கூடுங்கள்
இஸ்மாயில் நபியின் தியாகத்தை - நீங்கள் 
இதயத்திலே நினைவு கூறுங்கள்...!