புதன், 10 டிசம்பர், 2014

எழுவோம் இளைஞர்காள்....!



சோம்பலைக் கொள்வோம் நல்ல 
சுறு சுறுப்புதனைக் கொள்வோம் 
வீம்புகள் பேசிப் பொழுதை 
விரயமே பண்ணல் விட்டு 
நாம் தொழில் செய்வோம் இந்த 
நாட்டையே உயர்த்தி வெல்வோம்.....!

பாழ்நிலை மாற்றி யிங்கோர்
பசுமையே பூக்கவைப்போம்  
ஊழ்வினைப் பயனே என்று 
ஒடுங்கிய நிலையைக் கீழே 
வீழ்த்தியே வெல்வோம் வாழ்வில் 
வெற்றியே சொந்தம் கொள்வோம்.....! 

சடைமுடி வளர்ப்பதாலே 
தரித்திரம் தீர மாட்டா 
உடைகளை மேல் நட்டார் போல 
உடுப்பதால் பயனொன்றில்லை 
மிடிமைகள் தீர வேண்டில் 
வீரமாய் உழைத்தல் வேண்டும்.....!

இளைஞரின் வடிவமன்றோ 
இவ்வுலகத்தின் சக்தி....?
களைப்பினை விட்டு வீசி,
கனிவுடன் உழைப்பை எண்ணி 
இளைஞர்காள் எழுவோம் நாளை (ய)
இனிமையை இன்றே காண்போம்....!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக