புதன், 10 டிசம்பர், 2014

முடிவினி மரணம் ....!



துள்ளினேன் இளமை வாழ்வில்,
துயரினைத் தூர விட்டேன்
பள்ளியில் படித்த பின்னே 
பதவியும் வந்த தாலே 
கொள்ளையாய் இன்பந் தேடி 
குவலயம் தனில் - அலைந்தேன்.
உள்ளத்தே கோடி ஆசை 
உதித்தது செயலில் செய்தேன்.......!

ஆடினேன் அரங்கில் - புகழை 
அங்கும் யான் தேடிக் கொண்டேன்,
சூடினேன் வெற்றி வாகை 
"கலை" யென வாழ்வைக் கொண்டேன் 
தேடினேன் செல்வம் கோடி 
திருப்தியோ; எனக்கு இல்லை 
நாடினார் பல்லோர் என்னை 
நாடினேன் இன்பம் தன்னை......!

வதுவையும் செய்தேன் வாழ்வில் 
வரமெனக் குழந்தை பெற்றேன் 
மதுவினைக் கூடத் தொட்டேன் 
மங்கையைத் தேடிச் சென்றேன்,
எதுவுமே விட்டேன் என்று 
எண்ணுதற் இல்லை இன்றோ,
முதுமையில் நோயில் வீழ்ந்தேன் 
முடிவினி மரணம் தானே......!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக