செவ்வாய், 9 டிசம்பர், 2014

வாழும் வழி....!



நடந்ததை நினைத்து வருந்தாமல் - இனி 
நடப்பதில் கவனம் செலுத்தி விடு 
உடைந்த பாத்திரம் ஒட்டுமுன்னம் - நல்ல 
உயரிய பாத்திரம் படைப்பது மேல் 
 இடரினைக் கண்டு அஞ்சாது - அதை 
இதய பலத்துடன் எதிர் கொள்ளு 
இறைவனைத் துதித்துக் கண்ணியமாய் - தினம் 
கடமையைச் செய்து உயர்வடைவாய்.....!

போன "பொழுதுகள்" - திரும்பாது என்றும் 
பொய்களும் நிலைத்து வாழாது 
மானங்காத்து வாழ்பவரை - இங்கு 
மன்பதை என்றும் மறக்காது 
தேனாய் வாழ்வை அமைப்பதற்கு - நிதம் 
திடமே வேண்டும் நெஞ்சத்தில் 
வானும் மண்ணும் நம் சொந்தம் - என்று 
வாழ்ந்தால் இன்பம் உலகுய்யும்.....!

சாதிபேதம் தொலைத்தே தான் - நல்ல 
சமத்துவம் வளர்த்தல் பணியாகும் 
நீதி நேர்மை செயல்நுட்பம் என்றும் 
நெஞ்சில் அன்பு தனை வளர்த்து 
மேதினிதன்னில் ஒற்றுமையாய் - நல்ல 
மிடுக்கை வாழ்வது வாழ்வாகும் 
சாதனை வேண்டும் வாழ்க்கையிலே - வரும் 
சந்ததி வாழ்த்த வாழ்த்திடனும்.....!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக