வெள்ளி, 12 டிசம்பர், 2014

மனமாற்றம் வேண்டும்.....!


எழுத்தாளர் என்கின்றார் எழுதுவோருள் 
இவர் தானாம் மாமன்னர் செப்புகின்றார் 
"பழுத்தபழம்" போற் பேசும் இவரோயிங்கு
படைத்தவையின் பட்டியலோ பூஜ்ஜியம் தான் 
அழுத்தமுடன் எதைச் சொன்னார் புதுமையாக....?
அசலுண்மை கடல் நீரா உப்பு என்றார் 
வெளுத்த நிறம் பாலென்றார்  வானில் நீந்தும் 
வெண்ணிலாவின் ஒளி தன்மை என்று சொல்வார்....!

"நா" மெத்தத் தடித்ததனால் "நான்" நானென்று 
நலங்கெட்டவார்த்தைகளை கொட்டுகின்றார் 
"பா" மெத்தப்படைத்தளித்த பாவாணர் போல் 
பல மேடைகண்டவர் போல் பகருகின்றார் 
காமத்தைக் கருவாக கொண்டு ஏதோ 
கண்டபடி நாலைந்தைக் கிறுக்கியுள்ளார் 
நாமத்தை அச்சினிலே "பெரிதாய்ப்" போட
நாய் படாப்பாடு பல படுகின்றாரே.....!

பெண்ணழகை கவி செய்வார் பெண்களே இப் 
பெருவுலகில் பெறென்றும் சாற்றி நிற்பார்  
பெண்ணொருத்தி எழுத்துலகில் முன்னே நிற்கப் 
பித்தரிவர் "பெருமானது" இடங் கொடாது 
வண்டமிழைக் கொண்டு இவர்வசைகள் பாடி 
வருத்தமுறச் செய்திடுவார் வார்த்தையாலே 
மண்டைதனில் கணம் கொண்டார் அறிவைத்தீட்டி 
மனமாற்றம் பெற்றுய்ய வேண்டுகிறேன்.....!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக