ஞாயிறு, 7 டிசம்பர், 2014

யாவரும் கேளீர்....!



சாதி மத பேத மின்றி 
சரி சமமாய் மனிதர் நாம் 
மேதினியில் ஒரு குடியாய் 
மிடுக்காய் நிமிர்ந்து வாழ்வோம்....!

சிறிய குருவிக் கூட்டமெல்லாம் 
சேர்ந்து இனிதே வாழ்க்கையில் 
அறிவிற் சிறந்த மனிதர் நாமும் 
அழிவுப் பாதை செல்வதா....?

உலகில் வாழும் மனிதர்க்கெல்லாம் 
ஓடும் குருதி ஒரே நிறம் 
கழகம் பண்ணிக் கடிந்து வாழ்தல் 
காட்டு விலங்கின் இழி குணம்.....!

பிறப்பில் மனிதர் எவருமிங்கு 
பெரிது சிறிது இல்லையே 
சிறக்கும் வாழ்வில் செயலில் நேசச் 
சிந்தையாலே உயருவார்....!

பலிகள் செய்து பாவியாகப் 
பாரில் வாழ்வோர் சிறியவர் 
தெளிந்த அறிவு அன்பினோடு 
சேர்ந்து இனிது வாழுவோம்......!


0 கருத்துகள்:

கருத்துரையிடுக