திங்கள், 8 டிசம்பர், 2014

ஒற்றுமை.....!


இதயத்தில் இருள் தன்னைக் களைந்தெடுத்து - நல்ல
இசை தரும் வீணையாய்க் குடைந்தெடுத்து 
உதயத்தில் பூபாளம் மீட்டிடுவேன் - உன் 
உயர்வுக்கு நல்வழி காட்டிடுவேன்......!

தீமையை முளையிலே தீயிடுவேன் - எந்த 
தீயவர் வாழ்க்கையையும் திருத்திடுவேன் 
ஆமை போல் அமைதியாய் வாழச் சொல்வேன் - நெஞ்சில் 
ஆறுதல் வார்த்தைகள் கூறி வெல்வேன்......!

பேசும் மொழி உயிர் மூச்சு என்பேன் - மனிதர்க்குள் 
பேதைமை பாராதார் உயர்ந்தோரென்பேன் 
கூசும் நா வேற்றுமை கூறி நின்றால் - மனிதா 
கூடி நாம் வாழ்ந்தா லோர்குறை வருமோ.....?

எல்லா குருதிகளும் ஒரு நிறமென்பேன் - அவற்றை 
இறைவனும் ஒன்று என்பேன் 
இல்லை என்றால் தெய்வம் இவ்வுலகிலில்லை - மனிதா 
அல்லாஹ் துணையின்றி ஏதுமில்லை.....!

ஜாதிகள் ஆண்  பெண் இரண்டு என்பேன் - இங்கு 
யாவரும் சரி சம மாந்தரென்பேன் 
நீதி நிலை கெட்ட மனிதர்களை - கண்டு 
நெஞ்சமே நெருப்பாக வேகுதடா....!

ஏழையர் யாவரென் உடன் பிறப்பே - அவர் 
ஏற்றம் காண சேவை செய் திடுவேன்....!
கோழையாய் வாழ்வதை நான் வெறுப்பேன் - அவர் 
குறுக்கு வழி சென்றால் நான் தடுப்பேன்....!

அன்பு தான் என் மனச் சாந்தி யென்பேன் - அதை 
இதயத்தில் வைத்து நான் பேணிடுவேன்
பண்பான மாந்தரை வரவழைபேன் - கவி 
பாவாலே அவர் வாழ வாழ்த்துரைப்பேன்.....!  

கலைந்தோடும் நெஞ்சங்கள் துணையிருப்பேன் 
நிலையில்லா வாழ்வில் நான் நிறைந்திருப்பேன் - எந்த 
நிலை வந்த போதும் நான் - வாழ்வில் 
செய்ந் நன்றி மறவாமல் வாழ்ந்திருப்பேன்.....!

கூடாதே கூடாத கூட்டத்திலே - உன் 
குணம் கெட்டுப்போகும் அக் கூட்டத்தினால் 
நாடாதே மது மாது சூது கொலை தன்னை - அவை 
நாளெல்லாம் உன் வாழ்வை அழித்தொழிக்கும்....!

கண் முன்னே கயவரைக் கண்டேனென்றால் - நான் 
காறியவர் முகத்தின் முன் உமிழ்ந்திடுவேன் 
என் மனத் தோட்டத்தில் ஏங்குகிறேன் - நாட்டில் 
இன மூன்றும் ஒற்றுமை காண்பதென்று......?

பொல்லாத காலமினி மாற வேண்டும் - அதில் 
போலிகளும் புரட்டல்களும் ஒழிய வேண்டும் 
இல்லாமை நிலை முற்றாய் மாற வேண்டும் - பொருள் 
இருப்பவர் இல்லாருக்கு ஈய வேண்டும்.....!

இந்த நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும் - இங்கே 
இன மூன்றும் ஒற்றுமை காண வேண்டும் 
வன்முறையால் நன்மைகள் சேர்க்கலாமோ? - நல்ல 
வழி கண்டு அமைதி நிலை நாட்டலாமே.....!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக